Wednesday 3 July 2013

குற்றால சாரல் விழா 27-ந்தேதி தொடக்கம்


 நெல்லை, ஜூலை.2-

குற்றாலம் சாரல் விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. சாரல் விழாவை வரும் 27-ந்தேதி முதல் ஆகஸ்டு 2-ந்தேதி வரை நடத்தவும், விழா நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் சதுரங்கம், கோலப்போட்டி, இந்திய கலாசார ஆடை அலங்காரப் போட்டி, படகுப்போட்டி, வாலிபால், நீச்சல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

சாரல் விழாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, மருத்துவ வசதிகளை செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் பூங்கா பகுதியில் மலர், பழங்கள், காய்கறி, வாசனைப் பொருட்கள், நாய்கள், பாரம்பரிய உணவுகள், பாரம்பரிய கார்கள் கண்காட்சி நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குற்றாலத்தில் சீசன் காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அவசர கால ஊர்தி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. குற்றாலத்தில் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.


ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் விஜயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், தென்காசி கோட்டாட்சியர் மகேஷ், சுற்றுலா அலுவலர் சிவ.மாலையா, தோட்டக் கலை துணை இயக்குநர் ராஜன் ரவிச்சந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சவுந்தரராஜன், மாவட்ட சமூகநல அலுவலர் பூங்கோதை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

மருந்துகளுக்குத் தடை : நிறுவனங்கள் எதிர்ப்பு



இந்தியாவில் நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு வழங்கப்படும் 3 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

மருந்துகளுக்கு தடை விதிப்பது குறித்து எவ்வித பரிசீலனையோ அல்லது முன் கூட்டிய அறிவிப்பையோ தராமல், திடீரென மருந்துகள் தடை செய்யப்பட்டிருப்பதற்கு, சன் பார்மாக்யூடிகல் உள்ளிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.


தடையை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கையும் வைத்துள்ளன.

தேநீர் ஒரு சுவையான பானம்




சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சுறுசுறுப்பும், புத்துணர்வும், உற்சாகமும் அளிக்கவல்ல ஒரு சுவையான பானம் தேநீர். சுவையான தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க 1/2 கப் நீரில் 1/2பால் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளை பார்ப்போம்.

மசாலா டீ: ஏலக்காய் 6, கிராம்பு-6, சோம்பு 1 டீஸ்பூன், தனியா 1/2 ஸ்பூன் ஜாதிக்காய் சிறு துண்டு சுக்கு சிறு துண்டு, பட்டை சிறிது இவற்றை நைஸாக பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்தும் இந்த பொடியையும் தேயிலையுடன் சேர்த்துப் போட்டு கொதித்ததும் சீனி, பால், சேர்த்து வடிகட்டி அருந்தவும். இது குளிர்காலத்திற்கு சூடு கொடுக்கும் அருமையான தேநீர்.

ரோஸ் டீ: தேநீர் கொதிக்கும் போது புத்தம் புது ரோஜா இதழ்கள் சிலவற்றை போட்டு தேநீர் தயாரிக்கவும். ரோஜா பூ இதழ்களை ஒரு டப்பாவில் போட்டு வைத்தும் தேவையான போது உபயோகிக்கலாம்.

கோகோ டீ: குழந்தைகள் சாக்லேட் மணம் கொண்ட கோகோ டீயை மிக விரும்புவர். டீ தயாரிக்கும் போது தேவையான கோகோ பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு பரிமாறவும்.

இஞ்சி டீஅஜீரணம் வயிற்று கோளாறுகளை நீக்க வல்லது இஞ்சி டீ. இஞ்சியை தோலை சீவி விட்டு நன்கு நசுக்கி டீ கொதிக்கும் போது சேர்த்து தேநீர் தயாரிக்கவும்.

ஏலக்காய் டீ: ஏலக்காய்களை தோலுடன் பொடி செய்து தேநீரில் சேர்த்து கொதிக்க விடவும். இனிப்புகள் செய்ய ஏலப்பொடி செய்யும் போது ஏலக்காய் தோலை எரியாமல் சேகரித்து வைத்த உபயோகப்படுத்தலாம்.

எலுமிச்சை டீ: நீரை கொதிக்கவிட்டு தேயிலைப்போட்டு நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டவும். ஆறியதும் அதில் தேவையான எலுமிச்சை சாறு பிழியவும். தேவையான சர்க்கரை சேர்த்து சில ஐஸ்கட்டிகளைப் போட்டு பால் இல்லாமல் குடிக்கவும்.

புதினா டீ: சில புதினா இலைகள், துளசி இலைகள், இவற்றுடன் சிறுதுண்டு இஞ்சியை நசுக்கி போட்டு 4,5 மிளகைப்பொடி செய்து போட்டு நீரில் கொதித்ததும் தேயிலை, சீனி, பால், கலந்து வடிகட்டி அருந்தவும்.. இது ஜலதோஷம் இருமல் இவற்றிற்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.


தேநீர் நம் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலமளிக்கும் டானிக். நரம்பு, தசை, மண்டலங்களை சுறுசுறுப்பாக்கி புத்துணர்வு தருகிறது. காபி அருந்துவதைவிட தேநீர் அருந்துவது நல்லதே! அளவோடு அருந்த வேண்டும். அளவுக்கு மீறினால் நரம்புகளையும் வயிற்றையும்  பாதிக்கும். மிக சூடாக அருந்தும் தேநீர் வயிற்றின் உட்சுவர்களை புண்ணாக்கும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்!





உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது  சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் - டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு  தேவைப்படுகிறது

ஓட்ஸ், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பாதாம்  போன்ற பருப்பு வகைகள் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பதால், பெரும்பாலும் இத்தகைய உணவு வகைகளை பலரும் தவிர்க்கின்றனர். அதற்கு  மாறாக இவற்றை சாப்பிட்டால்  உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் கரையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கனடாடொரான்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜோன் செபேட் தலைமையில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு முடிவு குறித்து ஜோன் செபேட் கூறியதாவது: பொதுவாக உடல் எடையை குறைக்க பாதாம், பிஸ்தா ஆகியவற்றை தவிர்க்குமாறு  கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு நார்ச்சத்து அவசியம். இவற்றையும் தேவைக்கேற்ப உணவில் சேர்ப்பதில்லை. முறையான அறிவுரையின்றி  மேற்கொள்ளப்படும் உடல் பருமன் குறைப்பு நடவடிக்கைகள் பயனற்றதாகவே இருக்கும். மாறாக இதனால் உடல் பருமன் அதிகமாகும் ஆபத்தும்  உண்டு. சமீபத்திய எங்கள் ஆய்வில் ஓட்ஸ், நட்ஸ் அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுவது தெரிய  வந்துள்ளது.

அதிகளவு நார்ச்சத்து உள்ள உணவுகளும் உடலுக்கு அவசியம். சோயா உணவு வகைகளான சோயா பால், டோஃபு ஆகியவற்றை அதிகம் எடுத்துக்  கொள்ளலாம். பச்சை பட்டாணி, லென்டில்ஸ் உள்ளிட்ட பயிறு வகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். ஆய்வுக்காக எடுத்துக்  கொள்ளப்பட்டவர்களுக்கு இத்தகைய உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து கண்காணித்ததில் அவர்களது உடலில் கொலஸ்ட்ரால் அளவு 13  சதவீதம் குறைந்திருந்தது.


ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பை எளிதாக கரைக்கும். தொடர்ந்து இத்தகைய  நடவடிக்கைகளை மேற்கொண்ட 11 சதவீதம் பேர் இதய நோயில் இருந்து மீண்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளனர். இவர்கள் 10 ஆண்டுகளுக்கு  மேலாக இதய நோய் பாதிப்பால் அவதிப்பட்டவர்கள். உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் மட்டுமே உடல் பருமனுக்கு தீர்வாகாது. சரியான உணவு  முறையை தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியம். இவ்வாறு ஜோன் செபேட் கூறியுள்ளார்.

மும்பை: கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 181 புள்ளிகள் உயர்ந்தது. ஒரு மாதத்தில் இல்லாத அளவாக சென்செக்ஸ் 181 புள்ளி உயர்வு




பொருளாதார மந்தநிலை, நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றினால் சென்செக்ஸ் தொடர்ந்து ஏற்றத்தாழ்வுடன் இருந்து வந்தது. சமீபத்தில் சென்செக்ஸ் பெருமளவில் வீழ்ச்சி கண்டது. இந்நிலையில், வியாழக்கிழமை முதல் அதில் ஏற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது. யூனிலீவர் நிறுவனம் இந்தியாவில் செயல்படும் தன்னுடைய, ‘ஹிந்துஸ்தான் யூனிலீவர்கிளையை மேம்படுத்துவதற்காக, பங்குச்சந்தையில் ரூ29,220 கோடியை திரட்ட உள்ளதாக அறிவித்தது. இதனால் பெரும்பாலான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகளில் பெருமளவில் முதலீடு செய்தனர். மேலும், புளூசிப் நிறுவனங்கள் எனப்படும் பங்குச்சந்தையில் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தாத மாருதி சுசுகி, எல் அண்ட் டி, ஆர்..எல், உள்ளிட்டவற்றின் பங்குகளில் நேற்று அதிகம் முதலீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக 3வது நாளாக நேற்றும் சென்செக்ஸ் 181.58 புள்ளிகள் உயர்ந்து, 19,577.39 ஆக இருந்தது. சமீபத்தில் சென்செக்ஸ், கடந்த மாதம் 3ம் தேதி, 19,610.48 புள்ளிகளில் முடிவடைந்தது. அதன்பின்னர் சென்செக்ஸ் அதை நெருங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, நேற்று 56.65 புள்ளிகள் உயர்ந்து, 5,898 புள்ளிகளாக இருந்தது.

சிம் கார்டு வாங்குவதற்கும் கைரேகை கட்டாயம் புதிய விதிமுறையை கொண்டு வருகிறது மத்திய உள்துறை அமைச்சகம்


 புதுடெல்லி: மும்பை தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகளின் கையில் போலியான நபர்களின் பெயரில் சிம் கார்டுகள் கிடைப்பதை தவிர்க்க புதிய விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் கொண்டு வந்தது. அதன்படி முகவரி மற்றும் அடையாள சான்று இல்லாமல் சிம் கார்டுகள் விற்பனை செய்ய செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் அதன் முகவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை மீறுபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. இருப்பினும் போலி சான்றிதழ்கள் கொடுத்து சிம் கார்டுகள் வாங்கப்படுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் எதிரொலியாக சிம் கார்டுகள் வாங்க கைரேகை பதிவுகளை கட்டாயமாக்கலாம் என்ற முடிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வந்துள்ளது.

இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மத்திய தொலை தொடர்பு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிம்கார்டு வாங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து கைரேகையோ அல்லது இதர பயோமெட்ரிக் பதிவுகளையோ வாங்குவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. செல்போன் சேவை நிறுவனங்களிடம் கலந்தாலோசித்த பின் உள்துறை அமைச்சக கடிதத்துக்கு பதில் அளிக்கப்படும் என தொலைதொடர்பு துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆதார் அட்டை பெறுவதற்கு கைரேகை எப்படி கட்டாயமோ அது போல் விரைவில் சிம் கார்டு வாங்குவதற்கும் கைரேகை கட்டாயமாக்கப்படும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இளைஞர்களுக்கு எச்சரிக்கை டாடா, ரிலையன்ஸ் பெயரில் வேலைவாய்ப்பு மோசடி


புதுடெல்லி : கம்ப்யூட்டர் படிப்பு படித்தவர்களிடம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக ஏமாற்றி பணம் சம்பாதித்து வந்த சில தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வீழ்ந்துவிட்ட நிலையில், டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தியுள்ளன.

டாடா குழும நிறுவனங்களில் அதிகபட்சமாக 4,50,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் 23,519 பேர் நிரந்தரமாகவும், 29,462 பேர் தற்காலிகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், மோசடி வேலைவாய்ப்பு நிறுவனங்கள், டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்களில் தொழிலாளர்களை பணியில் நியமிப்பதற்கான ஆணையை தாங்கள் பெற்றுள்ளோம் என்றும், இப்பணியில் சேர வங்கியில் டெபாசிட் கட்ட வேண்டும் என்றும் இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர். இதை நம்பி ஏராளமான இளைஞர்கள் அவர்களிடம் பணத்தை கட்டி ஏமாறுகின்றனர்.


இதுகுறித்து டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தங்கள் நிறுவனங்களில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் யாரையும் பணியில் நியமிப்பதில்லை என்றும், நேரடியாக மட்டுமே பணியாளர்களை தேர்ந்தெடுப்பதாகவும் கூறியுள்ளன. மேலும், பணியாளர்கள் யாரிடமும் டெபாசிட் கட்டுமாறு தாங்கள் கூறுவதில்லை என்றும் தெரிவித்துள்ளன. இந்நிறுவனங்கள் இதுதொடர்பாக இளைஞர்களை எச்சரிக்க விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகவும், போலீசில் புகார் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

நோக்கியா ஆஷா 501 இன்று இந்தியாவில் அறிமுகம்



புதுடெல்லியில் இன்று நோக்கியா நிறுவனம் தனது புதிய நோக்கியா ஆஷா 501 மொபைல் மாடலை அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுக விழாவில் நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் எலோப் கலந்துக்கொண்டு ஆஷா 501 மொபைலை அறிமுகப்படுத்தினார். இதில் பேசிய அவர், ஆஷா போன் வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளிக்கும் விதமாக பேஸ்புக்குடன் நோக்கியா நிறுவனம் பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது என்று கூறினார். மேலும் ஏர்டெல்லில் இலவசமாக பேஸ்புக்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

நோக்கியா ஆஷா 501ன் சிறப்பம்சங்கள்:

* ஆஷா 501, 3 இன்ச் திரையுடன், 320x240 பிக்ஸல் நுணுக்கம் மற்றும் முழுவதும் தொடு திரை வசதிகளைக் கொண்டுள்ளது.

* 3.2 மெகாபிக்சல் கொண்ட கேமரா இருக்கிறது.

* இரண்டு சிம்கார்டு மற்றும் ஒற்றை சிம்கார்டு வசதியும் உள்ளது.

* இந்த ஸ்மார்ட்ஃபோனில் 17 மணி நேர டாக்டைம் வசதி உள்ளது.

* ஆஷா 501 மொபைல் போன் 2G and WiFi, Bluetooth 3.0. ஆகியவற்றிற்கும் சப்போர்ட் செய்கிறது.

* இதில் 4GB யிலிருந்து 32GB மெமரி கார்ட் மற்றும் 64 MB RAM வசதியும் உள்ளது.

* இதில் சிவப்பு, பச்சை, சியான், மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களும் உள்ளன.

* இதில் முன் கூட்டியே நிறுவப்பட்ட பயன்பாடுகளான பேஸ்புக், டுவிட்டர் ஆகியவையும் உள்ளன. மேலும், ஆஷா போன் வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளிக்கும் விதமாக பேஸ்புக்குடன் நோக்கியா நிறுவனம் பார்ட்னர்ஷிப் வைத்திருப்பதால் படங்களை நேரடியாக பேஸ்புக்கில் பகிர்ந்துக்கொள்ளலாம். இத்துடன் Nokia Xpress Browserம் உள்ளது.

* இந்த ஸ்மார்ட்ஃபோன் இந்திய மொழிகளான ஹிந்தி, மலையாளம், தமிழ் என பல்வேறு மொழிகளிலும் கீபோர்டு இருக்கிறது. வரும் ஜூனில் மார்க்கெட்டில் ரூ. 5,347 என்ற விலையில் களமிறங்க இருக்கிறது இந்த நோக்கியா ஆஷா 501 மாடல் ஃபோன்.


பேஸ்புக்குடன் பார்ட்னர்ஷிப் வைத்திருப்பதால் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இந்த நோக்கியா ஆஷா 501 இருக்கும் என்றும் நோக்கியா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் எலோப் நம்பிக்கைத் தெரிவித்தார்.